இந்தியாவில் மகாராட்டிர மாநிலம் | |
நாள் | 22 ஜூலை 2021 – முதல் |
---|---|
காரணம் | தீவிர மழை |
2021 மகாராட்டிரா வெள்ளம் (2021 Maharashtra floods) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம் முழுவதும் ஏற்பட்ட தொடர் வெள்ளத்தினைக் குறிப்பதாகும். 28 ஜூலை 2021 நிலவரப்படி வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சுமார் 251 பேர் இறந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேற்கு மகாராட்டிராவில் 13 மாவட்டங்கள் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
மகாராட்டிராவின் மேற்கு மாவட்டங்கள் பலவற்றில் 22 ஜூலை 2021 முதல் பலத்த மழை பெய்யத் துவங்கியது. 23 ஜூலை 2021 அன்று, என்டிடிவி, செய்தியின் படி மகாராட்டிராவில் கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவில் அதிக மழைப்பொழிவைக் கண்டதாக அறிவித்தது.
மகாராட்டிரா முழுவதும் பெரிய அளவிலான வெள்ளம் ஏற்பட்டதில் காலநிலை மாற்றத்தின் முக்கிய பங்கு உள்ளது. சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, வெள்ளம் ஏற்பட்ட பகுதிகள் உட்பட இந்தியா முழுவதும் பரவலாகத் தீவிர மழையானது மூன்று மடங்கு அதிகமாகப் பெய்துள்ளது. உள்ளூர் வானிலை அறிக்கையின்படி வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதைச் சுட்டிக்காட்டியது. அரபிக்கடலிலிருந்து வீசும் பருவமழை மேற்கு நோக்கி நிலைகொண்டது. இது மேற்கத்திய அரபிக் கடலிலிருந்து ஈரப்பதத்தை அசாதாரண அளவு கொண்டு வந்து, ஒரு வாரக் காலத்திற்குள் மகாராட்டிர முழுவதும் பலத்த முதல் தீவிர மழையாக பெய்தது. ஏப்ரல் 2021இல், பருவநிலை தாக்க ஆராய்ச்சிக்கான பாட்ஸ்டாம் நிறுவனம் பருவமழை மாற்றம் இந்தியத் துணைக்கண்டத்தின் பருவமழையினைப் பெரிதும் பாதிக்கும் என்று அறிவித்தது.
இம்மழையினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக ராய்கட், இரத்தினகிரி, சிந்துதுர்க், சாத்தாரா, சாங்குலி மற்றும் கோல்ஹாப்பூர் மாவட்டங்களாகும். இந்த கனமழை காரணமாக, இம்மாவட்டங்களில் 1,020க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; 375,000 க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 206,000 பேர் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுமார் 150,000 பேர் கோல்ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கோல்ஹாப்பூர், சாங்லி, சதாரா மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் 28,700க்கும் மேற்பட்ட கோழிகளும் 300 பிற விலங்குகளும் வெள்ளத்தினால் இறந்துள்ளன. ஆரம்ப மதிப்பீடுகளின்படி 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதன.
பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுச் சேதமடைந்தன. சுமார் 800 பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல்வேறு கிராமங்களுக்கிடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது சுமார் 700 கிராமங்களின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் சுமார் 14,700 மின்சார மின்மாற்றிகள் சேதமடைந்தன. இதனால் பெரும்பான்மையான பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மீட்புப் படையைச் சேர்ந்த (என்டிஆர்எஃப்) சுமார் 34 குழுக்கள் பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு 27 ஜூலை 2021 அன்று ₹700 கோடி (US$88 மில்லியன்) வெள்ள நிவாரண நிதி உதவியினை அறிவித்தது. பாரதிய ஜனதா கட்சியின் மகாராட்டிர மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வெள்ள நிவாரண நிதியாக தமது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக அறிவித்தனர்.