தேசத்துரோகம் அல்லது அரசதுரோகம் அல்லது இராஜதுரோகம் (Sedition) என்பது ஒரு நிறுவப்பட்ட ஒழுங்கான அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தல் அல்லது கிளர்ச்சியைத் தூண்டுதல் அல்லது ஒரு அரசியலமைப்பை சீர்குலைப்பது ஆகியவைகள் தேசத்துரோகம் ஆகும். அரசமைப்புச் சட்டங்களுக்கு எதிராக மறைமுகமான மற்றும் வெளிப்படையான வன்முறையை இலக்காகக் கொள்ளாவிட்டாலும், தேசத்துரோகம் எந்தக் குழப்பத்தையும் உள்ளடக்கியிருக்கலாம். எழுத்தில் உள்ள தேசத்துரோக சொற்கல், தேசத்துரோக அவதூறு ஆகும். சேதத்துரோகம் என்பது தேசத்துரோகத்தில் ஆர்வமாக ஈடுபடுபவர் அல்லது ஊக்குவிப்பவர் ஆவார்.
பிற்கால ரோமானியக் குடியரசில் அரசுக்கு கீழ்படியாமை என்பது நீதிமன்றத்தில் ஒரு குற்றமாக கருதப்படுகிறது. இதில் கீழ்படியாமை என்பது இராணுவக் கிளர்ச்சி மற்றும் அரசுக்கு எதிரான பொதுமக்களின் கும்பல் நடவடிக்கைகளும் அடங்கும். தேசத் துரோகத்தை வழிநடத்துவது அல்லது தூண்டுவது மரண தண்டனைக்குரிய குற்றமாகும். மக்கள் செல்வாக்கு படைத்த பிரபல அரசியல்வாதிகள் பொதுக் கூட்டங்களில் உணர்ச்சி பொங்க சூளுரைகள் உரைத்ததால், அரசியல் நெருக்கடியின் போது கிமு முதல் நூற்றாண்டில் உரோமைக் குடியரசில் தேசத்துரோகச் செயல்கள் அடிக்கடி நிகழ்ந்தது. அகஸ்ட்டஸ்-குளோடியசு போன்ற பேரரசர்கள் தேர்தல் மற்றும் சட்டமன்றத்த்தின் கடமைகளை ஒழிப்பதன் மூலம் இந்த சூழ்நிலையை களைந்தனர்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு தான் தேசத்துரோகத்தை வரையறுக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்கள் தேசத்துரோகமாகக் கருதப்படுகின்றது.
2003ல், விசுவ இந்து பரிசத்தின் பொதுச் செயலாளரான பிரவீன் தொகாடியா, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுத்ததற்காகவும், தேசவிரோதச் செயலில் ஈடுபட்டதற்காகவும் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்.
2010ல், எழுத்தாளர் அருந்ததி ராய், காஷ்மீர் மற்றும் மாவோயிஸ்டுகள் குறித்த அவரது கருத்துக்களுக்காக தேசத்துரோக குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் துணைத் தலைவர் பினாயக் சென் மீது தேசத்துரோக குற்றம் நிரூபிக்கப்பட்டது. 24 டிசம்பர் 2010 அன்று இராய்ப்பூர் மாவட்ட நீதிமன்றம் பினாயக் சென், நக்சல் சித்தாந்தவாதி நாராயண் சன்யால் மற்றும் கொல்கத்தா தொழிலதிபர் பியூஷ் குஹா ஆகியோர் அரசுக்கு எதிரான போராட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதற்காக தேசத் துரோகக் குற்றவாளிகள் எனக்கண்டறிந்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் 16 ஏப்ரல் 2011 அன்று பிணை பெற்றனர்.
10 செப்டம்பர் 2012 அன்று, அரசியல் கேலிச் சித்திரம் வரையும் அசீம் திரிவேதி, ஊழலுக்கு எதிரான தொடர் தனது வலைப்பக்கத்தில் கார்ட்டூன்கள் வரைந்ததற்கு எதிராக கைது செய்யப்பட்டு, தேசத்துரோக குற்றச்சாட்டில் 24 செப்டம்பர் 2012 வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். திரிவேதி தனது இணையதளத்தில் "அசிங்கமான மற்றும் ஆபாசமான" உள்ளடக்கத்தை பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டார். மேலும் 2011ல் மும்பையில் நடந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது அரசியலமைப்பை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். திரிவேதி தேசத்துரோகத்தின் கீழ் கைது செய்யப்பட்டது இந்தியாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் இதை ஒரு "முட்டாள்தனமான" நடவடிக்கை என்று கூறியது.
பிப்ரவரி 2016ல், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை இந்திய தண்டனைச் சடடத்தின் பிரிவு 124ஏயின் கீழ் தேசத்துரோக வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் (இபிகோ 124ஏ என்பது பிரித்தானிய ஆட்சியாளர்களால் செயல்படுத்தப்பட்ட தேசத்துரோகச் சட்டங்களின் ஒரு பகுதியாகும்). உறுதியான ஆதாரம் இல்லாததால் கன்னையா குமார் 2 மார்ச் 2016 அன்று இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டார். 13 சனவரி 2019 அன்று, 2016ல் பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கில் கன்னையா குமார் மீது தில்லி காவல் துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.
சனவரி 26, இந்தியக் குடியரசு நாளன்று தில்லியில் விவசாயிகள் பேரரணியில் வன்முறையைத் தூண்டியதாகவும், தவறான் தகவல்களைப் பரப்பியதாகவும் சசி தரூர், பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசய் மற்றும் 5 பத்திரிகையாளர்கள் மீது நொய்டா காவல்துறையால் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மே 2022 நிலவரப்படி, இந்திய உச்ச நீதிமன்றம் தேசத்துரோகச் சட்டத்தை இந்திய அரசு மறு ஆய்வு செய்ய இருப்பதால் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124ஏ நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தேசத்துரோகம் குறித்து இந்திய சட்ட ஆணையம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் தேசத்துரோக வழக்கில் குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டாக உயர்த்திப் பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தேசத்துரோகம் குறித்த சட்ட ஆணையத்தின் அறிக்கை மீதான ஆலோசனைகள் பெற்று பொது நலனுக்கான நியாயமான முடிவை எடுப்போம் என்றார்.
{{cite web}}
: CS1 maint: others (link)