அரசுமுறைப் பயணம் என்பது ஒரு நாட்டுத் தலைவர் வேற்று நாட்டின் தலைவர் ஒருவரின் அழைப்பினை ஏற்று அந்நாட்டுக்கு பயணம் செய்வதைக்குறிக்கும். இப்பயணக்காலத்தில் அழைப்பினை விடுத்த நாட்டுத்தலைவர் விருந்தோம்பல் புரவலராகக் (official host) கருதப்படுகின்றார். இவ்வகையான அரசுமுறைப் பயணங்கள் இரு இறைமையுள்ள நாடுகளிடையேயான உறவின் மிக உயரிய வெளிப்பாடாகக் கருதப்படுகின்றது. நாடாளுமன்ற முறை உள்ள நாடுகளில் அரசுத் தலைவர் இவ்வகை அழைப்பினை ஏற்பதோ விடுப்பதோ அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றப்பின்பே முடிவு செய்யப்படுவது வழக்கம்.
இப்பயணக்காலத்தில் சிறப்பு வரவேற்பு முதல், படைப்பிரிவினரின் அணிவகுப்பு உட்பட பல வெளிப்படையான மரியாதை விருந்தினருக்கு செலுத்தப்படும்.