இந்திய சீனப் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பனிப் போர் பகுதி | |||||||||
சீன இந்தியப் போர் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
இந்தியா | சீனா |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
பிரிஜ் மோகன் கோல் சவகர்லால் நேரு பிரான் நாத் தப்பார் | சாங் கோகுவா மாவோ சேதுங் லியு போசெங் லின் பியாவோ சோ என்லாய் |
||||||||
பலம் | |||||||||
10,000-12,000 | 80,000 | ||||||||
இழப்புகள் | |||||||||
1,383 பேர் இறப்பு 1,047 பேர் காயம் 1,696 பேர் காணாமல் போயினர் 3,968 பேர் பிடிபட்டனர் | 722 பேர் இறப்பு. 1,697 பேர் காயம் |
இந்திய சீனப் போர் என்பது 1962ம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட போரை குறிக்கும். இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை சிக்கலை காரணம் காட்டி இப்போர் நடந்தாலும், மற்ற புற காரணிகளும் இப்போர் நடப்பதற்கு முதன்மை காரணமாக விளங்கியது. 1959ல் திபெத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை தொடர்ந்து சீன அதிகாரத்தை ஏற்க மறுத்த தலாய் லாமாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. இந்தியா முன்னோக்கிய கொள்கை என்பதை முன்னெடுத்து எல்லைப் பகுதியில் வெளிஅரண்களை அமைத்தது.
1962 அக்டோபர் 20ல் சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையை கடந்து தாக்குதலை நடத்தியது. சீன படைகள் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னேறி பல பகுதிகளை கைப்பற்றினர். மேற்கு பகுதியில் சுசுல் பள்ளத்தாக்கிலுள்ள ரிசாங் லா கணவாயை கைப்பற்றினார்கள், மேலும் கிழக்கு பகுதியில் தாவாங் என்ற இடத்தையும் கைப்பற்றினார்கள். சீனா 1962, நவம்பர் 20ல் போர்நிறுத்தம் அறிவித்ததை தொடர்ந்து இப்போர் முடிவுக்கு வந்தது. மேலும் அவர்கள் சிக்கலுக்குரிய கைப்பற்றிய பகுதிகளில் இருந்து பழைய நிலைக்கு திரும்பினார்கள்.
இந்தியாவும் சீனாவும் நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. மங்கோலியா, ருசியாவிற்கு அடுத்து சீனா இந்தியாவுடன் தான் நீண்ட எல்லையை கொண்டுள்ளது. இந்திய சீன எல்லையில் பூடானும் நேபாளமும் வருவதால் இந்திய-சீன எல்லை மூன்று துண்டுகளாக உள்ளது. அக்சய் சீனா எனப்படும் பகுதி இந்திய மேற்கு எல்லையில் உள்ள எல்லை உடன்பாடு எட்டப்படாத பகுதியாகும். இதை இந்தியா காசுமீரின் ஒர் பகுதி என்றும் சீனா தனது சிங்சியான் மாகாணத்தின் ஓர் பகுதி எனவும் கூறுகின்றன. பூடானுக்கும் மியான்மாருக்கும் இடையே உள்ள பகுதி இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசமாகும், இதை சீனா தனது திபெத்தின் தென்பகுதி என்கிறது.
இப்போரானது கடல் மட்டத்திலிருந்து 4200 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான இடத்தில் நடைபெற்றதால் போர் தளவாடங்களை இரு தரப்பும் போர்முனைக்கு கொண்டு செல்வதில் சிரமத்தை சந்தித்தனர், இப்போரில் இந்தியா மற்றும் சீனா இரண்டும் வான் மற்றும்்கடற்படையை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயர்ந்த மலைப்பகுதிகளில் நடந்த இப்போரில் எதிரி நாட்டு படைகளால் படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளை விட கடும் குளிரால் ஏற்பட்ட இழப்பே அதிகம்.
மேற்கு பகுதியில் இந்திய சீன எல்லை 1834ல் சீக்கிய கூட்டமைப்பு லடாக்கை கைப்பற்றியதால் உருவானது. 1842ல் பெரும்பாலான வட இந்திய பகுதிகள் சீக்கிய கூட்டமைப்பின் அரசின் கீழ் இருந்தன. இக்கூட்டமைப்பு தனது எல்லைகளின் நிலையை உறுதிபடுத்தி அண்டை நாடுகளுடன் உடன்பாட்டை கைச்சாத்திட்டது. 1846ல் ஆங்கிலேயர்கள் சீக்கிய கூட்டமைப்பை தோற்கடித்ததன் காரணமாக லடாக் ஆங்கிலேயர்களின் இறையாண்மையின் கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து ஆங்கில அரசு அதிகாரிகள் சீன அதிகாரிகளை தொடர்பு கொண்டு எல்லை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரு முனைகளான காரகோரம் கணவாய் மற்றும் பாங்ஆங் ஏரி ஆகிய பகுதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன, ஆனால் அக்சய் சீன பகுதி சரியாக வரையறுக்கப்படவில்லை.
1865ல் ஆங்கிலேய நிலஆய்வாளர் ஜான்சன் காசுமீர் மகாராசாவால் அக்சய் சீன பகுதியை அளவிட பணிக்கப்பட்டார். அவர் அக்சய் சீன பகுதி காசுமீரின் எல்லைக்குள் உள்ளவாறு ஜான்சன் கோடு என்னும் எல்லையை வரையறுத்தார். அதை சீன அரசாங்கம் நிராகரித்தது. ஆங்கிலேய அரசும் இந்த எல்லை தொடர்பாக ஐயம் கொண்டது. எனவே ஆங்கிலேய அரசு இச்சிக்கலை தீர்த்து உடன்பாடு எட்ட முனைந்தது. ஆனால் இச்சிக்கல் தீர்வதற்கு முன் 1892 சீனா காரகோரம் கணவாய் பகுதியில் எல்லை கல்களை நட்டது, இது லடாக்குக்கும் ஜின்ஜியாங்கிற்கும் இருந்த பழைய வழியை ஒட்டி நடப்பட்டது. சீனத்தின் இச்செய்கையை அப்போதிருந்த இந்திய ஆங்கிலேய அரசு ஏற்கவில்லை.
19ம் நூற்றாண்டின் பெரும் பகுதியில் மத்திய ஆசியாவை யார் கட்டுப்படுத்துவது என்பதில் பிரித்தானிய பேரரசுக்கும் உருசிய பேரரசுக்கும் இடையை போட்டி இருந்தது. இதனால் ஆங்கிலேய அரசு அக்சய் சீன பகுதியை சீனாவிற்கு கொடுத்து உருசிய ஆதிக்கம் தன் எல்லைக்கு வராமல் தடுக்கு அரண் ஏற்படுத்த முனைந்தது. இதைத்தொடர்ந்து உருவாக்கப்பட்ட எல்லைக்கு மெக்கார்ட்டி-மெக்டோனல்ட் கோடு என்று அறியப்படுகிறது. சீனா மற்றும் பிரித்தானிய இந்தியாவின் வரை படங்கள் அக்சய் சீனத்தை சீன பகுதி என காட்டின. 1911ல் சீனாவில் ஏற்பட்ட சின்காய் புரட்சி மூலம் சீனாவில் அதிகார மாற்றங்கள் நடைபெறத்தொடங்கியது. 1918ல் (உருசியாவில் ஏற்பட்ட அக்டோபர் புரச்சி காரணமாக) பிரித்தானிய அரசு சீனா அக்சய் சீன பகுதியை வைத்திருப்பதில் எந்த பயனுமில்லை என கருதியது. எனவே பிரித்தானிய வரைபடங்களில் மீண்டும் அக்சய் சீன் ஜான்சன் வரைபடத்தில் உள்ளது போல் காசுமீரத்தை சார்ந்தது என மாற்றப்பட்டது. எனினும் இப்பகுதி வரையறுக்கப்படாமலயே இருந்தது. நெவில் மேக்ஸ்வெல் என்ற பிரித்தானிய செய்தியாளரின் கணக்குப்படி அரசியல் நிலைகளுக்கேற்ப பிரித்தானியாவால் 11 விதமான எல்லைகள் இப்பகுதிக்கு வரையறுப்பட்டன. இந்தியா சுதந்திரமடைந்த போது ஜான்சன் கோடு படி மேற்கு பகுதியின் எல்லை அதிகாரபூர்வாக நிர்ணயிக்கப்பட்டது. 1954ல் இந்தியப்பிரதமர் சவகர்லால் நேரு இந்த எல்லையை உறுதிபட கூறினார். அக்சய் சீன பகுதி லடாக் பகுதியுடன் பல நூற்றாண்டுகளாக உள்ளதாகவும் அதனால் எல்லைக்கோடு (ஜான்சன் கோடு படியானது) பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது என்றும் கூறினார். ஜார்ஜ் பட்டர்சன் என்பவர் அக்சய் சீன் இந்திய பகுதி என தெரிவிக்கும் ஆவணங்கள் தெளிவில்லாமலும் ஆவணங்களின் சில மூலங்கள் ஐயத்திற்கு உட்பட்டும் இருந்ததாக தெரிவிக்கிறார்.
1956-57 காலகட்டத்தில் சீனா அக்சய் சீன் பகுதி வழியாக ஜின்ஜியாங்கையும் திபெத்தையும் இணைக்கும் சாலையை கட்டியது. இந்த சாலை சீன வரைபடத்தில் 1957ம் ஆண்டு வரும் வரை இந்தியாவிற்கு அப்பகுதியில் சீனா கட்டியிருக்கும் சாலை பற்றி தெரியாது.
1825-26ல் நடைபெற்ற ஆங்கிலேய பர்மிய போரில் மணிப்பூர் அஸ்ஸாம் ஆகிய பகுதிகளைப் பர்மியர்களிடம் இருந்து பிரித்தானியா கைப்பற்றியது. இந்த வடகிழக்கு எல்லைப்புறப் பகுதிகளுக்கு பிரித்தானியாவின் முகவராக செயல்பட்ட படைப்பணித்துறைத் தலைவர் ஜெங்கின்சு 1847ல் தாவாங் திபெத்தின் பகுதி எனத் தெரிவித்ததபடி இல்லையென்று கூறினார். அதை இந்தியப் பிரித்தானிய அரசு முதலில் ஏற்கவில்லை. 1934ல் இருந்தே அது மக்மோகன் கோட்டை எல்லையாகக் கொண்டு தன் அதிகாரபூர்வ வரைபடங்களை உருவாக்கியது. எல்லை நகரான தாவாங்கின் உரிமை தவிர மெக்மோகன் கோடு வரையறுத்த எல்லை எதனையும் திபெத் எதிர்க்கவில்லை. இரண்டாம் உலகப்போர் வரை தாவங்கைத் திபெத் முழு உரிமையுடன் இந்திய பிரித்தானிய அரசுக்கு அனுமதித்திருந்தது.
அக்சாய் சின் பகுதி இந்தியாவுக்கு சொந்தம் என நேரு அறிக்கை விட்டபோது சீன அரசு அதிகாரிகள் அதை மறுத்து எதுவும் சொல்லவில்லை. 1956ல் சீன அதிபர் சோ என்லாய் இந்திய கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு தாம் உரிமை கோரப்போவதில்லை என்றார். பின்பு அவர் அக்சய் சீன் சீனாவின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால் தன் முன்னைய பேச்சு சரி என்று கூறினார். மேலும் அதனை இந்திய பகுதி என தாம் கருதவில்லை என்றும் கூறினார்.
திபெத்தை தனது நாட்டின் பகுதி என கூறி அதை 1950ல் சீன படைகள் ஆக்கரமித்தது. 1959ல் ஏற்பட்ட திபெத் கிளர்ச்சி தோல்வியில் முடிந்ததால் அப்போதைய தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். தலாய்லாமா மற்றும் திபெத்தில் இருந்து வந்தவர்களை இந்தியா ஆதரித்தது சீனாவிற்கு கோபத்தை உண்டாக்கியது.
சீனா, இந்தியாவின் அருணாசலப்பிரதேசத்தின் தாவாங் பகுதியில் ஊடுருவல் செய்த செய்தியை, அப்பகுதியில் ஆடு-மாடு மேய்ப்பவர்கள் இந்திய அரசிடம் கூறியும், சீனா இராணுவ நடவடிக்கைகளை உரிய நேரத்தில் முறியடிக்க, இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் வி. கே. கிருஷ்ணமேனன் ஆகியவர்கள் இந்திய இராணுவத்திற்கு ஆணையிட தாமதித்து, மெத்தனமாக இருந்தனர் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்டர்சன் புரூக்ஸின் இரகசிய அறிக்கையை, 50 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய இதழியலாளர் நீவில் மேக்சுவெல் 2013-ஆம் ஆண்டில் வெளியிட்டார்.