தன்னாட்சி சமூகம் | |
---|---|
வகை | தன்னாட்சி அமைப்பு |
அமைவிடம் | எசுப்பானியா |
உருவாக்கம் | 1978 எசுப்பானிய அரசியலமைப்புச் சட்டம் |
உருவாக்கப்பட்டது | 1979–1983 |
எண்ணிக்கை | 17 (+2 தன்னாட்சி நகரங்கள்) |
மக்கள்தொகை | 78,476–8,415,490 |
பரப்புகள் | 4,992–94,222 கிமீ² |
அரசு | தன்னாட்சி அரசு |
உட்பிரிவுகள் | மாநிலம் கோமார்கா நகராட்சி |
தன்னாட்சி சமூகங்கள் (ஆங்கில மொழி: autonomous community, எசுப்பானியம்: comunidad autónoma) 1978ஆம் ஆண்டு இயற்றப்பட்ட எசுப்பானிய அரசியலமைப்பின்படி நிறுவப்பட்ட முதல்நிலை அரசியல் மற்றும் நிர்வாக பிரிவுகளாகும். எசுப்பானிய நாட்டில் உள்ள பல்வேறு நாட்டினரையும் மண்டலங்களையும் ஒன்றிணைக்க அவர்களுக்கு தன்னாட்சியை உறுதிசெய்யும் நோக்கோடு இந்தப் பிரிவுகள் உண்டாக்கப்பட்டன.
முழுமையான நாட்டிற்கு மட்டுமே இறையாண்மை இருப்பதால் (தேசிய அல்லது நடுவண் அரசு இயந்திரங்களால் செயற்படுத்தப்படுவதால்) இந்தச் சமூகங்களுக்கு இறையாண்மை இல்லை. அதாவது எசுப்பானியா ஓர் கூட்டாட்சி அல்ல; ஆட்சி மிகவும் பரவலாக்கப்பட்ட ஒருமுக அரசு ஆகும். சமூகங்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பில் விதிக்கப்பட்ட எல்லைகளுக்குள் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டுள்ளன.
எசுப்பானியாவில் மொத்தம் 17 தன்னாட்சி சமூகங்களும் 2 தன்னாட்சி நகரங்களும் உள்ளன; இவை கூட்டாக "தன்னாட்சிகள்" என அறியப்படுகின்றன.