கான்வளர் குழந்தை அல்லது காட்டான் குழந்தை (feral child) என்பது மனிதருக்குரிய நடத்தை, குணம், மொழி மற்றும் மனிதப்பராமரிப்பு ஆகியன பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அற்று மிக இளம் வயதிலேயே மாந்தரின் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு வசித்து வந்த குழந்தையைக் குறிப்பதாகும். சில கான்வளர் குழந்தைகள் மக்களாலேயே (பொதுவாக அவர்களது சொந்த பெற்றோர்களால்) வெளியுலகத் தொடர்பு ஏதுமின்றி அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். சிலவேளைகளில் குழந்தைகள் கைவிடப்படும் இந்நிகழ்வு அக்குழந்தைகளின் அறிவுசார் அல்லது உடல்சார் குறைபாடுகளைப் பெற்றோர் நிராகரிப்பதன் விளைவாக ஏற்படுகின்றது. கான்வளர் குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்படும் முன்னர் அல்லது வீட்டைவிட்டு ஓடிப்போக முன்னர் கொடுமைப்படுத்தப்பட்டு அல்லது முறைகேடான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இருந்திருக்கலாம். கான்வளர் குழந்தைகள் சில நேரங்களில் கிராமியப் புனை கதைகளின் அல்லது மரபுக் கதைகளின் பாத்திரமாக இருக்கிறார்கள். இக்கதைகளில் இவர்கள் பொதுவாக விலங்குகளால் வளர்க்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. இரட்யார்ட் கிப்ளிங் எனும் புகழ்மிக்க எழுத்தாளரின் தி ஜங்கிள் புக் எனும் புனைகதையில் வரும் பிரதான கதாபாத்திரமான மௌக்லி ஒரு கான்வளர் குழந்தை.
ஆவணப்படுத்தப்பட்ட அல்லது நம்பப்படும் நிகழ்வுகள்
விலங்குகளால் கான்வளர் குழந்தைகள் வளர்க்கப்பட்டதாக நம்பப்படும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
உயர் விலங்கினத்தால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்
மரினா சப்மான் - கொலம்பிய நாட்டில் நான்கு வயதில் இருந்து ஒன்பது வயது வரை கப்பியூச்சின் குரங்குகளுடன் வசித்ததாக இற்றைவரை குறிப்பிடுகின்றார். இவரது குறிப்பின்படி, 1954ஆம் ஆண்டுப் பகுதியில் இவர் கடத்தப்பட்டு குரங்குகள் வசிக்கும் வனாந்திரத்தில் விடப்பட்டார்.
பெயர் தெரியாத "மௌக்லிச் சிறுமி", உத்தரப்பிரதேசம், இந்தியா, சனவரி 2017 - எட்டுவயதுக்கும் பன்னிரண்டு வயதுக்கும் இடைப்பட்ட அகவை கொண்டிருக்கக்கூடிய சிறுமி மிகவும் மெலிந்த நிலையில் நிர்வாணக் கோலத்துடன் மரம் வெட்டுபவர்களால் கத்தார்னியாகட்டு சரணாலயப் பகுதியில் (Katarniaghat Wildlife Sanctuary) கண்டறியப்பட்டார்.
பெல்லோ, நைஜீரிய சிம்பன்சிச் சிறுவன் (1996) - ஏறத்தாழ இரண்டு வயதுடைய சிறுவன் சிம்பான்சிகளால் ஒன்றரை ஆண்டுகள் வளர்க்கப்பட்டிருந்தான்.
ஓநாயால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்
கெஸ்சன் ஓநாய்ச் சிறுவன்:15–7 (1304, 1341 and 1344).
மார்க்கசு உரொட்ரிகசு பன்டோசா (1946, சியேரா மோரேனா, எசுப்பானியா) - தெற்கத்திய எசுப்பானிய மலைத்தொடரில் பன்னிரண்டு ஆண்டுகள் ஓநாய்களுடன் தனது பத்தொன்பதாவது அகவை வரை வாழ்ந்துள்ளார். உரொட்ரிகசின் வரலாறைத் தழுவி என்றிலோபோஸ் எனும் எசுப்பானிய-செருமானிய திரைப்படம் 2010ம் ஆண்டில் உருவானது.
இலியோகா (2007, கலூகா, மத்திய இரசியா)
நாயால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்
அக்சானா அலெக்சாந்த்ரிவ்னா மாலயா (உக்ரைன், 1990) - ஐந்து ஆண்டுகளாக தனது எட்டு வயது வரை குடிகாரப் பெற்றோரின் புறக்கணிப்புக்கு ஆளாகி நாய்களுடன் வசித்து வந்தார்.
இவான் மிசுகோவ் (மாஸ்கோ, உருசியா, 1992) - இரண்டு ஆண்டுகள் நாயின் பராமரிப்பில் வளர்ந்தார்.