கௌந்தேயன் | |
---|---|
கௌந்தேயன் உள்ளிட்ட தமது நான்கு சீடர்களுக்கு புத்தர் உபதேசித்தல் | |
சுய தரவுகள் | |
பிறப்பு | கிமு 6ம் நூற்றாண்டு |
Occupation | பிக்கு |
பதவிகள் | |
Teacher | கௌதம புத்தர் |
கௌந்தேயன் அல்லது அஜாத கௌந்தேயன் (Kauṇḍinya Ājñātakauṇḍinya), கௌதம புத்தரின் முதல் நான்கு சீடர்களில் முதலாமர் ஆவார். பௌத்த சமயத்தில் அருக நிலையை அடைந்தவர்களில் முதலாமவர். இவர் இந்தியாவின் தற்கால உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் பகுதிகளில் கிமு 6ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
இளமையில் வேதங்களை கற்ற அந்தணரான கௌந்தேய ரிஷி , கபிலவஸ்துவின் சாக்கியகுல மன்னர் சுத்தோதனர் அரசவையில் பணியாற்றியவர். கௌதம புத்தர் பிறந்தவுடன், சோதிட சாத்திர நூல்களை ஆய்ந்து, புத்தர் எதிர்காலத்தில் மிகப்பெரிய துறவியாக மக்கள் மத்தியில் விளங்குவார் எனக் கணித்து கூறியவர்.
கௌதம புத்தர் தமது 29வது அகவையில் இல்லறத்தைத் துறந்து துறவு மேற்கொண்டு ஞானத்தைத் தேடி ஆறு ஆண்டுகள் தவம் மேற்கொண்ட போது, கௌதமருடன் தங்கியிருந்த நால்வரில் கௌந்தேயனும் ஒருவர்.
ஒரு கால கட்டத்தில் புத்தரின் தவத்தில் ஐயம் கொண்ட நால்வர், அவரிடமிருந்து விலகி வாராணசிக்கு சென்றனர். புத்தர் கயாவில் ஞானம் அடைந்தவுடன், தன்னுடன் முன்னர் தங்கியிருந்த நால்வரை வாராணாசியில் கண்டு, தான் ஞானம் அடைந்ததை உபதேசித்தார்.
புத்தரின் தத்துவங்களை ஏற்ற முதல் சீடரான கௌந்தேயன், தனது உறவினர் புன்னாவுடன் சேர்ந்து புத்த தருமத்தை வட இந்தியா முழுவதும் பரப்பினார்.
பெரும் முனிவர்களான ஆலார காலமர் மற்றும் உத்தக ராமபுத்திரர் ஆகியோர்களின் உபதேசதத்தின்படி, சித்தாத்தர் தன்னுடன் வந்த கௌந்தேயன் உள்ளிட்ட நால்வருடன் உருவேலா எனுமிடத்தில் உணவும், நீருமின்றி ஆறு ஆண்டுகள் மெய்வருத்தத் தவமிருந்தனர்.
மெய் வருத்த தவம் இயற்றுவதால் மட்டுமே ஞானம் கிடைக்காது என அறிந்த சித்தாத்தர், தவ வாழ்வை துறந்து, நீர் அருந்தி, உணவு உண்டார். சித்தாத்தரின் செயலைக் கண்ட கௌந்தேயன் உள்ளிட்ட நால்வர், சித்தாத்தரிடமிருந்து விலகி, வாரணாசி அருகே உள்ள சாரநாத் சென்று அங்கே கடும் தவம் மேற்கொண்டனர்.
சித்தாத்தர் கயையில் ஞானம் பெற்றவுடன், தான் பெற்ற பெரும் அறிவை, முன்னர் தன்னருகில் இருந்து தவம் நோற்ற கௌந்தேயன் உள்ளிட்ட ஐவருக்கு சாரநாத்தில் நான்கு பெரும் உண்மைகளை உபதேசித்தார். கௌந்தேயன் இந்த பெரும் உண்மைகளின் படி நடந்து அருகதர் நிலைக்கு உயர்ந்தார்.