சாரணியம் Scouting | |||
---|---|---|---|
நாடு | உலகளவில் ஐக்கிய இராச்சியம் (தோற்றம்) | ||
நிறுவப்பட்டல் | 1907 | ||
நிறுவுநர் | பேடன் பவல் | ||
| |||
சாரணியம் (Scouting) என்பது உலகளவில் இளைஞர்களின் உடல், உள, ஆன்மீக மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் ஆகும். இளைஞர்கள், சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட வாழ்வை வாழ்வதற்கும், வெளியகச் செயற்பாடுகளில் உச்ச திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் சாரணியம் வழிவகுக்கின்றது. இது 20ஆம் நூற்றாண்டின் முன் அரைப்பகுதியில் குருளைச் சாரணர், சாரணர், திரி சாரணர் ஆகிய மூன்று பிரதான பிரிவுகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பெண்களுக்கென சாரணியம் 1910 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. உலகின் பாரிய இளைஞர் அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
1906, 1907 ஆகிய ஆண்டுகளில் பிரித்தானிய இராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக பேடன் பவல் பணி புரிந்துகொண்டிருக்கும் போது, உளவு பார்த்தல் மற்றும் சாரணியம் என்பவற்றைப் பற்றி நூலொன்றை எழுதினார். பிரித்தானிய ஆபிரிக்காவின் பிரதம சாரணராக விளங்கிய பிரெடரிக் ரசல் புர்னாம், ஏர்னஸ் தொம்ப்சன் செடன், வில்லியம் அலெக்சாண்டர் சிமித், மற்றும் வெளியீட்டாளர் பியர்சன் ஆகியோரினால் ஏற்பட்ட தாக்க்த்தினால் பேடன் பவல் 1908 ஆம் ஆண்டில் இலண்டனில் இளைஞர்களுகான சாரணியம் (Scouting for Boys) எனும் நூலை எழுதி வெளியிட்டார். அத்துடன், 1907ஆம் ஆண்டில் 20 சிறுவர்களை வைத்து இங்கிலாந்திலுள்ள பிறவுன்சித் தீவில் தனது நூலில் எழுதவுள்ள எண்ணங்களை பரிசோதிப்பதற்காக பாசறை ஒன்றையும் நடாத்தினார். இப்பாசறையும், நூலுமே சாரணியத்தின் ஆரம்பங்களாகும்.
சாரணியம் நீச்சல், விளையாட்டு, பாசறை செய்தல், நடைப் பிரயாணம், மர வேலை உள்ளடங்கிய பல வெளியகச் செயற்பாடுகளை கற்றுக்கொடுப்பதனை முறைமையாகக் கொண்டுள்ளது. மேலும் பலராலும் பொதுவாக அறியப்படும் சாரண சீருடை சாரணியத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும்.
சாரணியத்தின் பாரிய இளைஞர் அமைப்புக்களாக உலக சாரணர் சம்மேளனமும், உலகப் பெண் சாரணர் சம்மேளனமும் கொள்ளப்படுகின்றன. 2007ஆம் ஆண்டில் சாரணியத்தின் நூற்றாண்டு விழாவானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
சாரணியம் தோற்றம் பெற்றதற்கு உத்வேகம் அளித்தது இளைஞர்களுகான சாரணியம் நூலின் வெளியீடு ஆகும். பேடன் பவல், சிறுவயதில், இங்கிலாந்தின் பிரபலப் பொதுப் பாடசாலைகளில் ஒன்றான, சாட்டர் இல்லத்தில் இருந்த போது வெளியக செயற்பாடுகளில் நாட்டம் கொண்டார். 1880களில் பிரிதானிய இந்தியாவில் இராணுவத்தில் கடமையாற்றிய பேடன் பவல் இராணுவ சாரணியத்தில் ஆர்வம் கொண்டதுடன் உளவும் சாரணியமும் (Reconnaissance and Scouting) எனும் நூலையும் 1884இல் வெளியிட்டார்.
பேடல் பவல் 1896 ஆம் ஆண்டில் தெற்கு ருடீசியாவில் பணியமர்த்தப்பட்டார். அங்கே, பவலுக்கு பிரெடரிக் ரசல் புர்னாமுடனான நெடுநாள் நட்பு ஆரம்பமாகியது. பேடன் பவல், இக்காலங்களில் எதிரிகளின் பிரதேசத்தில் உளவு பார்த்தல் தொடர்பான பல அனுபவங்களையும் பெற்றுக்கொண்டார். இளைஞர்களுகான சாரணியம் நூலில் எழுதுவதற்கான பல எண்ணங்களையும் இங்கிருந்தே பெற்றுக்கொண்டார். பேடன் பவலின் கைத்திறன்களை மேலும் அதிகப்படுத்துவதற்கு புர்னாம் உறுதுணையாய் அமைந்தார். பின்னர், பிரித்தானிய இராணுவத்திற்கு மேலும் பலர் தேவையானதால், ஆராய்தல், சுவடறிதல் ஆகியவறில் ஈடுபாடுகொண்ட இளைஞர்களுக்குக் கைத்திறன் பயிற்சி மற்றும் இராணுவப்பயிற்சிகளை புர்னாமும் பேடன் பவலும் இணைந்து வழங்கினர். இக்காலத்திலேயே, புர்னாமைப்போல பேடன் பவலும் பிரதாரத் தொப்பியை அணிய ஆரம்பித்தார். அத்துடன் குடு மிருகக் கொம்பினை ஊதுவதை ஆரம்பித்ததும் இக்காலப்பகுதியிலேயே ஆகும். இம்மிருகக் கொம்பு போரின் முன் ஊதப்படுவதாகும். இதனையே பேடன் பவல் பிறவுன்சித்தீவுப் பாசறையில் சாரணர்களை பயிற்சியின் முன் ஒரு இடத்தில் ஒன்றிணைப்பதற்குப் பயன்படுத்தினார்.