சுதந்திரவாதம் அல்லது தாராண்மியவாதம் (libertarianism: லிபர்ட்டேரியனிசம்) ஒர் அரசியல் பொருளாதாரக் கொள்கை. இயன்றளவு அரசின் பங்கு குறைவாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமைய வேண்டும் என்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை. குறிப்பாக அரசின் வன்முறைக்கான அதிகாரத்தை இயன்றவரை கட்டுப்படுத்த இது பரிந்துரைக்கிறது. தனி மனிதனின் சுதந்திரம் இன்னொரு மனிதனை பாதிக்காத வகையில் அவளுக்கு/அவனுக்கு முழுமையான சுதந்திரத்தை இந்தக் கொள்கை வேண்டுகிறது. எங்கே ஒரு மனிதனின் உரிமைகள் பாதிக்கப்படுகிறதோ, அதைப் பாதுகாக்க மட்டுமே அரசுக்கு வன்முறைக்கான அதிகாரம் உண்டு என்கிறது. எடுத்துக்காட்டாக, விபச்சாரம், ஆபாசம் போன்றவை மற்ற மனிதர்களை நேரடியாக பாதிப்பதில்லை, எனவே அவற்றை குற்றவியல் செயல்களாகக் கருதக் கூடாது என்று இது வலியுறுத்துகிறது.
சுதந்திரவாதத்தைப் பொறுத்தவரையில் தனிமனிதத்துவத்தையும், தனிமனித உரிமைகளையும் மிக அடிப்படையான, மிக முக்கியமானதாகக் கருத்துகிறது. தனிமனிதர்களே தெரிவுகள் செய்யக் கூடியவர்கள், அவர்களின் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள். பிறரைப் பெளதீக முறையில் பாதிக்காத வகையில் முழுமையான சுதந்திரம் தனிமதர்களுக்கு உண்டு என்கிறது. போதைப் பயன்பாடு, தற்கொலை போன்ற தனக்குப் பாதகமான தெரிவுகளை தனிமனிதர் செய்தாலும் அதற்கு அவருக்கு உரிமை உண்டு என்கிறது.
வலிந்து தாக்காமைக் கொள்கை (Non-aggression principle) என்பது தனிமனித உரிமைகளின் நீட்சி ஆகும். ஒருவரின் செயற்பாட்டு பிறரைப் பெளதீக நோக்கில் பிறரைப் பாதிக்காத வகையில் அவர் மீதோ, அவரது உடைமைகள் மீதோ தாக்க முடியாது, அத்துமீற முடியாது. ஒருவர் தாக்கப்பட்டால் அற அல்லது ஆயுதப் போராட்ட முறையில் தற்காப்புச் செய்வதை இக் கொள்கை தடுக்கவில்லை. இக் கொள்கை களவு, ஏமாற்றல் போன்ற குற்றங்களையும், பிற நாடுகள் மீது படையெடுப்பதை, ஆக்கிரமிப்பதை, தலையிடுவதையும் குற்றங்களாகத் தடுக்கிறது.
சுதந்திரவாதம் திறந்த சந்தையையும், தனியார் சொத்துரிமையையும் முதன்மைப் பொருளாதாரக் கொள்கைகளாக முன்வைக்கிறது. மனிதர்களின் நலம் சிறக்க அவர்கள் பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். திறந்த சந்தையே சுதந்திர மனிதர்களுக்கு ஏற்ற, சுதந்திர மனிதர்கள் அவர்களின் தெரிவுகளுக்கு ஏற்ற முறையிலான பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபட சிறந்த முறை. இவ்வாறு இவர்களின் உழைப்பின் ஊடாகப் பெறப்படும் உடைமைகளுக்கு இவர்கள் முழு உரித்தும் உடையவர்கள்.
சுதந்திரவாதம் அனைத்து அல்லது அனேக பொருளாதர செயற்பாடுகள் திறந்த சந்தை மூலமே நிகழவேண்டும் என்று வேண்டுகிறது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, ஊடகம், கலைத்துறை, நில மேலாண்மை, வேளாண்மை உட்பட அனேக துறைகள் திறந்த சந்தை மூலமே நிகழவேண்டும் என்று கருதுகிறது. திறந்த சந்தையே இதை செயற்றிறனுடன் செய்ய முடியும் என்று கூறுகிறது. படைத்துறை, காவல்துறை, நீதித்துறை ஆகிய துறைகளில் மட்டுமே அரசுக்கு ஒரு பங்கு உண்டு என்கிறது. இதனையும் கூட சில தீவர சுதந்திரவாத நிலைப்பாட்டாளர்கள் மறுப்பர்.
தனிமனிதர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு வரம்புக்குட்பட்டதாகவும், கட்டுப்படுத்தப்பட்டாதாகவும், அதன் பணிகள் தெளிவாக வரையை செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று சுதந்திரவாதம் கருதுகிறது. அதிகாரம் குவியப்படுத்தப்படுதலையும், அரசு பெரிதாவதையும் சுதந்திரவாதம் விரும்புவதில்லை.
மேற்கு நாடுகள் பலவற்றில் சுதந்திரவாதம் பரவி இருக்கிறது. இருப்பினும் இது இன்னும் மையநீரோட்ட கொள்கையாக யாராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அமெரிக்காவிலேயே இதற்கு பலத்த தார்மீக ஆதரவு இருக்கிறது.