சேரி என்பது சங்ககாலத்தில் முல்லை நிலத்தின் ஊரை குறிக்க வழங்கப்பட்ட பெயர். இன்று அப்பெயர் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் வாழும் ஊர் அல்லது ஊரின் பகுதியாக காட்டப்படுகிறது. குறிப்பாக இவை தாழ்ந்த, சூழலியல் சிக்கல்கள் உள்ள நிலப்பகுதிகள் ஆகும். ஐக்கிய நாடுகள் அமைப்பான யுஎன் - ஹாபிட்டாட்டின் வரையறையின்படி தரக்குறைவான வீடுகள், ஏழ்மை, குடியிருப்போருக்கு பாதுகாப்பற்ற சூழல் போன்றவற்றைக் கொண்டிருக்கும் நகரப்பகுதி சேரியாகும். தமிழ்நாட்டில் சேரி வாழ் மக்கள் சாதிப் பாகுபாட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் சென்னை போன்ற நகரங்களில் புதிதாக பல்லாயிரக் கணக்கில் நகரை நோக்கி வந்த மக்கள் அடையாறு, கூவம் நதிக்கரையோரங்களிலும் பக்கிங்காம் கால்வாய் ஓரத்திலும் ஓலைக்குடிசை அமைத்து வாழத் தொடங்கினார்கள். அரசு மற்றும் தனியார் நிலங்களிலும் குடிசை போட்டுக்கொண்டு வாழ்ந்ததோடல்லாமல், பல லட்சம் பேர் சாலையோரங்களிலும் நடைபாதைகளிலும் வாழத் தொடங்கினர். 1970-ம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த பத்ரிநாத் அறிக்கை 43 சதவீத மக்கள் சென்னையில் குடிசைப் பகுதிகளிலும் நடைபாதைகளிலும் வசிப்பதாகக் குறிப்பிட்டது. குடிசைவாழ் மக்கள் நலன் கருதி 1971-ல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு குடிசை மாற்றுச் சட்டம், 1971த்தின் படி, தமிழக அரசு சேரிகளை அடையாளம் கண்டு, அவைகளை சேரிகளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, பின்னர் இந்த பகுதிகளில் மேம்படுத்த வேண்டும். சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் சென்னையிள் 1,202 சேரிகளில் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. 1985 ஆம் ஆண்டு பட்டியலில் மேலும் 17 சேரிகள் சேர்க்கப்பட்டன. இந்த சேரிகளில் அனைத்து கட்டிட குடியிருப்பு வீடுகள் அல்லது அடிப்படை சேவைகளை வழங்குவதன் மூலம் அல்லது மூல இடத்தில் (in-situ) மேம்படுத்தல் மூலம் மேம்படுத்தப்பட்டன. ஆனால், 1985க்கு பிறகு ஒரு புதிய சேரி கூட அதிகாரப்பூர்வமாக சென்னையில் அடையாளம் காணப்படவில்லை. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 2002 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், சென்னை பெருநகர பகுதியில் 444 அங்கீகரிக்கப்படாத சேரிகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.