உருவாக்குனர் | பைட்டேன்ஸ் |
---|---|
தொடக்க வெளியீடு | செப்டம்பர் 2016 |
அண்மை வெளியீடு | 15.5.42 / ஏப்ரல் 06, 2020 |
இயக்கு முறைமை | ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளம் |
கோப்பளவு | 287.6 MB (ஐஓஎஸ்) 84 MB (ஆண்ட்ராய்டு) |
கிடைக்கும் மொழி | தமிழ், ஆங்கிலம் உட்பட பல மொழிகள் |
மென்பொருள் வகைமை | நிகழ்படங்கள் பகிர்தல் |
உரிமம் | இலவசமென்பொருள் |
இணையத்தளம் | tiktok.com (ஆங்கிலம்) douyin.com (சீனம்) |
டிக்டாக் (TikTok, சீனம்: 抖音; பின்யின்: Dǒuyīn; நேர்பொருளாக "vibrating sound") டூயின் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது. ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் பெற்றது.
டிக் டாக் செயலியின் மூலமாக ஆபாசமாக நடன அசைவுகள் இருப்பதாகவும் சமூகச் சீரழிவிற்கு வழிவகுப்பதாகவும் பலதரப்பில் இருந்து கருத்துக்கள் வந்ததன் அடிப்படையில் அதனைத் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில், வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் இந்த செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, இதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "டிக்டாக்" செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து டிக்டாக் நிறுவனம், தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டிக்டாக் செயலியை பிளேஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோர் தளங்களில் இருந்து நீக்குமாறு, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதனை ஏற்று டிக் டாக்கை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளேஸ்டோர் நீக்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. டிக்டாக் நிறுவனம் தொடர்ந்த மனுவை மதுரை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 22, 2019 அன்று விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் இந்த தடை தளர்ந்ததாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதன்படி ஏப்ரல் 22, 2019 அன்று இந்த வழக்கை விசாரித்து மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஆபாச நடன அசைவுகள், சமூக சீர்க்கேடு நடன அசைவுகள் போன்றவற்றை பதிவேற்றம் செய்யக்கூடாது என நிபந்தனையுடன் டிக்டாக் செயலிக்கான தடையை நீக்கியது.
இந்த தடை நீங்கிய பிறகு டிக்டாக் செயலியை பிளேஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோர் தளங்களில் பதிவிறக்கம் செய்யும் வசதி மீண்டும் கொண்டுவரப்பட்டது.
இச்செயலியானது தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகள் உள்பட 59 செயலிகளுக்கு 29 சூன், 2020 அன்று இந்திய அரசு அதிரடியாக தடை செய்தது. பின்பு டிக்டாக் செயலியை பிளேஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோர் தளங்களிலிருந்து நீக்கப்பட்டது.