டெமோஸ்தனிஸ் | |
---|---|
பிரான்சு, பாரீசில் உள்ள (இலூவா அருங்காட்சியகத்தில் உள்ள டெமோஸ்தனிசின் மார்பளவு சிலை | |
பிறப்பு | கிமு 384 ஏதென்ஸ் |
இறப்பு | கிமு 12 அக்டோபர் 322 (வயது 62) காலௌரியா தீவு (இந்நாளைய போரோஸ் தீவு |
டெமோஸ்தனிஸ் (Demosthenes) (கிரேக்கம்: Δημοσθένης ; கி.மு 384 – 12 அக்டோபர் 322) ஒரு கிரேக்க அரசியல்வாதியும் மற்றும் பண்டைய ஏதென்சின் சொற்பொழிவாளரும் ஆவார். அவரது சொற்பொழிவுகள் சமகால ஏதெனிய அறிவுசார் வலிமையின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக அமைகின்றன மற்றும் கிமு 4 ஆம் நூற்றாண்டில் பண்டைய கிரேக்கத்தின் அரசியல் மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு உட்காட்சியை வழங்குகின்றன. முந்தைய சிறந்த சொற்பொழிவாளர்களின் உரைகளைப் படிப்பதன் மூலம் டெமோஸ்தனிஸ் சொல்லாட்சியைக் கற்றுக்கொண்டார். அவர் தனது 20 வயதில் தனது முதல் நீதி உரைகளை நிகழ்த்தினார், அதில் அவர் தனது பரம்பரைக்கு எஞ்சியிருப்பதைப் பெற்றுத் தருவதற்காக தனது பாதுகாவலர்களிடமிருந்து பெற திறம்பட வாதிட்டார்.
டெமோஸ்தனிஸ் கி.மு 384 இல் (98ஆம் ஒலிம்பியாடின் இறுதி ஆண்டு அல்லது 99 ஆம் ஒலிம்பியாடின் முதலாம் ஆண்டு) பிறந்தார். இவருடைய தந்தையாரின் பெயரும் டெமோஸ்தனிஸ் ஆகும். இவரது குடும்பம் ஏதெனிய நாட்டுப்புறத்தின் பேனியாவின் டெமே எனுமிடத்தில் வாழ்ந்து வந்த ஒரு நாடோடி பழங்குடி இனமான பாண்டியோனிசு இனத்தைச் சார்ந்தவர். டெமோஸ்தனிசின் தந்தை ஒரு வளமையான வாள் தயாரிப்பாளர் ஆவார். தனது 7 ஆம் வயதில் டெமோஸ்தனிஸ் அனாதையானார். அவரது தந்தை அவருக்கு நல்ல செல்வத்தை சேர்த்து வைத்திருந்த போதிலும், அவரது சட்டபூர்வமான பாதுகாவலர்கள் அபோபஸ், டெமோபோன் மற்றும் தெரிப்பிடிஸம் ஆகியோர் அவரது வாரிசுடைமையை தவறாகக் கையாண்டனர்.
தனது பாதுகாவலர்களை நீதிமன்றத்திற்கு இழுக்க விரும்பியதாலும், அவர் "நுட்பமான உடலமைப்பு" கொண்டிருந்ததாலும், அங்குள்ள வழக்கமான, உடற்பயிற்சிக் கல்வியைப் பெற முடியாதிருந்ததாலும் டெமோஸ்தனிஸ் சொல்லாட்சிக் கலைகளைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பேரலல் லைவ்ஸ் என்ற நூலில், புளூடார்ச், டெமோஸ்தனிஸ் ஒரு நிலத்தடி அறையைத் தனது படிப்பிற்காக கட்டியெழுப்பினார், அங்கு அவர் தனது தலையில் ஒரு பாதியை சிரைத்துக் கொண்டு வேறெங்கும் செல்லாமலும், பேசுவதற்கான பயிற்சியை எடுத்துக் கொண்டும் இருந்தார். புளூடார்ச் அவர் "ஒரு தெளிவாகப் பேச இயலத மற்றும் திக்குவாய் உச்சரிப்பு" கொண்டிருந்தார் என்கிறார். தனது இக்குறைபாட்டில் இருந்து விடுபடுவதற்காக அவர் வாயில் கூழாங்கற்களுடன் பேசுவதன் மூலமும், ஓடும்போது அல்லது மூச்சு விடும்போது வசனங்களை மீண்டும், மீண்டும் சொல்வதன் மூலமும் பயிற்சியில் ஈடுபட்டார். ஒரு பெரிய கண்ணாடியின் முன் பேசுவதையும் தனது பயிற்சியாகக் கொண்டிருந்தார்.
கிமு 366 ஆம் ஆண்டில் டெமோஸ்தனிஸ் சொத்துரிமைக்கான வயதினை அடைந்த பிறகு, தனது பாதுகாவலர்களிடம் தனது சொத்துக் கணக்கினைக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார். டெமோஸ்தனிசின் கூற்றுப்படி, டெமோஸ்தனிசின் தந்தை 14 ஏதென்சிய டேலண்ட் என்ற மதிப்பிற்கு இணையான மதிப்புடைய (ஒரு வேலையாளின் சராசரி தினக்கூலியின் அளவில் 220 ஆண்டுகளுக்கான ஊதியம் அல்லது இடைநிலையான அமெரிக்க ஆண்டு வருமானத்தில் 11 மில்லியன் டாலர்கள்) பண்ணைத் தோட்டத்தை விட்டுச் சென்றிருந்தாலும், அவர்கள் பராமரித்திருந்த சொத்துக் கணக்கு முறைகேடாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. டெமோஸ்தனிஸ் தனது பாதுகாவலர்கள் "வீட்டையும், பதினான்கு அடிமைகளையும், முப்பது வெள்ளிகளையும் தவிர வேறு எதையும் விட்டுவைக்கவில்லை என்பதை உறுதிபடக் கூறினார். தனது 20 வயதில் டெமோஸ்தனிஸ் தனது பரம்பரைச் சொத்தை மீட்டெடுப்பதற்காக தனது பாதுகாவலர்கள் மீது வழக்குத் தொடுத்ததோடு ஐந்து சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்: அவற்றில் கிமு 363 மற்றும் 362 ஆண்டுகளில் அபோபஸுக்கு எதிராக மூன்றும் மற்றும் கி.மு 362 மற்றும் 361 பகாலங்களில் ஓனெட்டருக்கு எதிராக இரண்டும் ஆகும். நீதிமன்றங்கள் டெமோஸ்தெனிசின் இழப்பை 10 ஏதென்சிய தாலத்துகள் என்று மதிப்பிட்டது. வழக்குகளின் அனைத்துக் கட்ட விசாரணைகளும் முடிந்த பிறகு டெமோஸ்தெனிசு தனது பரம்பரைச் சொத்தின் ஒரு பகுதியை மீட்டெடுப்பதிலேயே வெற்றி பெற்றார்.