பியேர் கியூரி | |
---|---|
பிறப்பு | 15 மே 1859 பாரிஸ்,பிரான்ஸ் |
இறப்பு | 19 ஏப்ரல் 1906 பாரிஸ்,பிரான்ஸ் | (அகவை 46)
தேசியம் | பிரெஞ்சு |
துறை | இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | சார்போன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | பால் லாங்வின் ஆண்ட்ரூ லூயிஸ் டெபீர்ன் மார்க்ரெட் காத்ரின் பெரே |
அறியப்படுவது | கதிரியக்கம் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1903) |
குறிப்புகள் | |
பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர். அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர். 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக தாவி விருது வழங்கப்பட்டது.
1859 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் பியேர் கியூரி பாரிசில் பிறந்தார். இவருடைய தந்தை டாக்டர் யூஜின் கியூரி தாயார் சோபி கிளாரி டெபௌளி கியூரி. ஆவார். இவருடைய தந்தை ஒரு பொதுநல மருத்துவராகப் பணியாற்றி வந்தார். பியேர் கியூரிக்கு வீட்டிலேயே இளமைக் கல்வி தொடங்கப்பட்டது. தனது 14 ஆம் வயதிலேயே இவருடைய கணித ஆர்வம் வெளிப்பட்டது. 16 வயதில் பல்கலைக் கழகப் படிப்பிற்காக நுழைந்தார். 18 வயதில் அமெரிக்காவில் முதுகலைக்கு நிகரான பட்டத்தைப் பெற்றார். ஆனால் பண வசதி இல்லாத காரணத்தால் அப்பட்டத்திற்குரிய தகுதியான பணிகளைச் செய்ய இயலவில்லை. மிகுந்த தாழ்ந்த ஊதியம் பெற்ற ஆய்வக உதவியாளராக மட்டுமே இவரால் பணியில் அமர முடிந்தது.
ஜேக்குவிஸ் என்ற இவரது அண்ணனுடன் இணைந்து முதல் முக்கியமான அறிவியல் ஆய்வில் இவர் ஈடுபட்டார். அப்போது பியேரின் வயது 21. அண்ணனின் வயது 24. இருவரும் சேர்ந்து அழுத்த மின் விளைவினைக்(Piezo Electric Effecr) கண்டுபிடித்தனர். அதாவது சில படிகங்களில் அழுத்தத்தைச் செலுத்தும் போது அவை மின்னழுத்தத்தை வெளிப்படுத்தின. மாறாக அவற்றை மின் புலத்தில் வைத்தால் அப்படிகங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்த இரு செயல்களுக்கும் உள்ள ஒரே தன்மையுள்ள அடிப்படைப் பண்புகள் இயற்பியல் விதிகளை மேம்படுத்த உதவின.
பியேர் கியூரி- மேரி கியூரி இணையர் நோபல் பரிசு பெற்றவர்கள். அதே போன்று இவர்களின் மூத்த மகளான ஐரீன் ஜோலியட் கியூரி,விஞ்ஞானியான ஃபிரெடரிக் ஜோலியட் என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து கதிரியக்கம் பற்றி தொடந்து ஆய்வுகள் செய்து செயற்கை முறையில் கதிரியக்கத்தை உண்டக்கும் வழியொன்றைக் கண்டு பிடித்தனர். இதற்காக 1935-ல் ஐரின் கியூரிக்கும் அவரது கணவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருடைய இரண்டாவது மகள் ஈவ் கியூரி சிறந்த இசைக் கலைஞராகவும், எழுத்தாளராகவும் புகழ் பெற்றார். இவர் தனது தாயார் மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார்.
1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள் பாரிசில், புயலுடன் கூடிய கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போது ரியூடௌபைன் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே இவர் கடக்கும் போது பெரிய சரக்கு வண்டி ஒன்று இவரை மோதிக் கீழே தள்ளியதால் இவர் மரணம் அடைந்தார். கியூரி தம்பதியரைப் பெருமைப்படுத்தும் விதமாக பல அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
அறிவியல் ஒளி, மே-2009 இதழ்.