பிராவ்தா (ரஷ்ய மொழி: Правда, "உண்மை"; உச்சரிப்பு:ப்ராவ்தா) சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியான ஒரு முன்னணி நாளிதழ் ஆகும். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918 - 1991 ஆண்டுகளில் வெளிவந்தது. இப்பத்திரிகை பின்னர் 1991இல் அதிபர் போரிஸ் யெல்ட்சினினால் நிறுத்தப்பட்டது. ஆனால் இதே பெயரில் ரஷ்யாவில் முன்னாள் ப்ராவ்தா ஊழியர்களினால் இப்பத்திரிகை வெளியிடப்பட்டுவருகிறது. முன்னைய ப்ராவ்தா பத்திரிகை பனிப்போர்க் காலத்தில் மேற்குலகில் மிகவும் புகழ்பெற்றிருந்தது.
லியோன் த்ரொட்ஸ்கி பிராவ்தா என்ற பெயரில் முதன் முதலாக ரஷ்யப் பாட்டாளி மக்களுக்காக ரஷ்ய ஜானநாயக சோஷலிசப் பத்திரிகையாக ஆரம்பித்தார். ரஷ்யாவில் தணிக்கையைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரியாவின் வியென்னாவில் அச்சிடப்பட்டு ரஷ்யாவில் விநியோகிக்கப்பட்டது. அக்டோபர் 3, 1908 இல் முதலிதழ் வெளியானது. இது பின்னர் ஜனவரி 1910 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சியின் பத்திரிகையாக வெளிவர ஆரம்பித்தது. கட்சியில் இருந்த உட்பூசல் காரணமாக இப்பத்திரிகை பின்னர் ஏப்ரல் 22, 1912 இதழுடன் நிறுத்தப்பட்டது.
கட்சியின் லெனின் ஆதரவான போல்ஷெவிக் பகுதியினர் செயின்ட் பீற்றர்ஸ்பேர்க் நகரில் இருந்து டிசம்பர் 1910 இல் ஸ்வெஸ்தா என்ற வார இதழை ஆரம்பித்தனர். இது பின்னர் வாரத்தில் நாட்களாக வெளியிடப்பட்டு பின்னர் நாளிதழாக்கப்பட்டது.
ஏப்ரல் 22, 1912 இல் போல்ஷெவிக்குகளினால் ப்ராவ்தா இதழ் அரசாங்கத் தணிக்கையுடன் வெளியிடப்பட்டது. இது பின்னர் ஜூலை, 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரின்போது அரசினரால் மூடப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்களில் இப்பத்திரிகை 8 வெவ்வேறு பெயர்களில் வெளிவந்தது.:
1917 சோவியத் புரட்சிக்குப் பின்னர் மீண்டும் ப்ராவ்தா வெளிவர ஆரம்பித்து, அக்டோபர் புரட்சியின் பின்னர் 100,000 பிரதிகள் தினமும் விற்பனையாகின.
மார்ச் 3, 1918 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் தலைநகரம் மொஸ்கோவுக்கு இடம் மாறியதில் இருந்து ப்ராவ்தா மொஸ்கோவில் இருந்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாக வெளிவர ஆரம்பித்தது.
ஆகஸ்ட் 22, 1991இல் அன்றைய ரஷ்ய அதிபர் போரிஸ் யெல்ட்சின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து அதன் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போது ப்ராவ்தா பத்திரிகையும் மூடப்பட்டது.