பொங்பொங் மார்க்கோசு (Bongbong Marcos) எனப் பொதுவாக அழைக்கப்படும் பெர்டினாண்டு ரொமுவால்டெசு மார்க்கோசு இளை (Ferdinand Romualdez Marcos Jr. பிறப்பு: 13 செப்டம்பர் 1957), பிலிப்பீன்சின் அரசியல்வாதியும், நடப்பு அரசுத்தலைவரும் ஆவார். இவர் முன்னதாக 2010 முதல் 2016 வரை பிலிப்பீன்சின் மேலவை உறுப்பினராகப் பதவியில் இருந்தார். இவர் முன்னாள் அரசுத்தலைவர் பெர்டினண்டு மார்க்கோசு மூத்., பிலிப்பீன்சின் முன்னாள் முதல் பெண்மணி இமெல்டா மார்க்கோசு ஆகியோரின் ஒரேயொரு மகனும், இரண்டாவது மகவும் ஆவார்.
மார்க்கோசு 1980 ஆம் ஆண்டில், அந்த நேரத்தில் பிலிப்பீன்சை இராணுவச் சட்டத்தின் கீழ் ஆட்சி செய்த அவரது தந்தையின் புதிய சமுதாய இயக்க கட்சியில் போட்டியின்றி, இலோக்கோசு நோர்ட்டின் துணைநிலை ஆளுநராகத் தெரிவானார். பின்னர் இவர் 1983-இல் இலோக்கோசு நோர்ட் ஆளுநரானார். மக்கள் அதிகாரப் புரட்சியால் அவரது குடும்பம் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 1986 பிப்ரவரியில் அவாயிற்கு நாடுகடத்தப்படும் வரை அந்தப் பதவியை வகித்தார். 1989 இல் அவரது தந்தையின் இறப்பிற்குப் பிறகு, இவரது குடும்பத்தை அன்றைய அரசுத்தலைவர் கொரசோன் அக்கினோ பிலிப்பீன்சு திரும்பி பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அனுமதித்தார். மார்க்கோசும், அவரது தாயார் இமெல்டாவும், அவரது தந்தையின் சர்வாதிகார ஆட்சியின்போது மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக US$353 மில்லியன் செலுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அமெரிக்காவில் கைதாணை இவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1992 முதல் 1995 வரை இலோகொஸ் நோர்டேயின் 2வது மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக மார்கோசு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 இல் இலோக்கோசு நோர்டேயின் ஆளுநராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் 2007 முதல் 2010 வரை அம்மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2010 முதல் 2016 வரை தேசியவாதக் கட்சியின் கீழ் மேலவை உறுப்பினராக இருந்தார். 2015 இல், மார்க்கோசு 2016 ஆம் ஆண்டிற்கான தேர்தலில் துணை அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு, 263,473 வாக்குகள், 0.64 சதவீத வேறுபாட்டில் தோற்றார். இதற்குப் பதிலடியாக, மார்க்கோசு அரசுத்தலைவர் தேர்தல் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தார். மறு வாக்கு எண்ணப்பட்ட போதும், 15,093 வாக்குகளால் தோல்வியடைந்தார்.
2021 இல், மார்க்கோசு 2022 தேர்தலில் அரசுத்தலைவராகப் போட்டியிடுவதாக அறிவித்தார். கூட்டாட்சிக் கட்சியின் கீழ் போட்டியிட்டு, பெரும் வெற்றி பெற்றார். மார்க்கோசு, 1986-இல் ஐந்தாவது குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து மிகப் பெரும்பான்மையால் தேர்ந்தெடுக்கப்பட்டு (ஏறத்தாழ 59% வாக்குகள்) அரசுத்தலைவரானார். 2022 மே 25 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவராக அதிகாரபூர்வமாக மக்களவையினால் அறிவிக்கப்பட்டார். 1981 ஆம் ஆண்டில் அவரது தந்தை எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக் காரணமாக 88% வாக்குகளைப் பெற்ற பின்னர், இவரே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அரசுத்தலைவராவார்.
மார்க்கோசினது தேர்தல் பரப்புரை நடுநிலையாளர்களின் பெரும் விமர்சனத்தைப் பெற்றது, இவரது பரப்புரை தந்தையின் கொள்கைகளை மறுசீரமைப்பதிலும், போட்டியாளர்களைக் களங்கப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட வரலாற்று மறுப்புவாதத்தால் உந்தப்பட்டதாக அவர்கள் விமர்சித்தனர். இவரது பரப்புரை தந்தை அரசுத்தலைவராக இருந்தபோது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் கொள்ளைகளை வெள்ளையடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.தி வாசிங்டன் போஸ்ட்2000களில் இருந்து மார்க்கோசின் வரலாற்று சிதைவு எவ்வாறு நடந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது, அதே நேரத்தில் த நியூயார்க் டைம்ஸ் அவரதும், அவரது குடும்பத்தினரினதும் வரி மோசடிகளை மேற்கோள் காட்டியது. அத்துடன் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் அவரது படிப்பு எவ்வாறு தவறாக வழிநடத்தப்பட்டது என்றும் எழுதியது.
2022 சூன் 30 அன்று, பொங்பொங் மார்க்கோசு பிலிப்பீன்சின் அரசுத்தலைவராக தேசிய அருங்காட்சியகத்தில் அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார்.