இசுலாமிய உய்குர் மக்கள், கஜக்ஸ் மக்கள், கிர்கிஷ் மக்கள் மற்றும் துருக்கிய இன மக்கள்
தாக்குதல் வகை
தடுப்புக் காவல் முகாம்களில் அடைத்தல், கட்டாயக் கருக்கலைப்பு, கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு, கட்டாய உழைப்பு, கொடுமை இழைத்தல், பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் கூட்டுப் பாலியல் வல்லுறவு
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இசுலாமிய மக்களை சீனப் பண்பாட்டிற்கு மாற்றுதல் இஸ்லாமோபோபியா சீன அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்குதல்
உய்குர் இனப்படுகொலை, சீனாவின் வடமேற்கில் உள்ள சிஞ்சியாங் மாகாணத்தில் வாழும் இசுலாமிய உய்குர் மக்கள் மற்றும் பிற இன கஜக்ஸ் மக்கள், கிர்கிஷ் மக்கள் மற்றும் துருக்கிய இன இசுலாமிய மக்களுக்கு எதிராக சீன அரசாங்கம் 2014-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களை செய்து கொண்டிருக்கிறது. இதனை பெரும்பாலும் பண்பாட்டுப் படுகொலை என்று வகைப்படுத்தப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு முதல், சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் சீன அதிபரான சீ சின்பிங்கின் நிர்வாகத்தின் கீழ், சீன அரசாங்கம், எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இன்றி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான துருக்கிய முஸ்லிம்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கும் கொள்கைகளைப் பின்பற்றுகிறது.
இது போன்ற மனித உரிமை மீறல்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இன மற்றும் மதச் சிறுபான்மையினர் மீதான மிகப்பெரிய அளவிலான தடுப்புக் காவலாகும்.2017ஆம் ஆண்டு முதல் சிஞ்சியாங் மாகாணத்தில் சுமார் பதினாறாயிரம் மசூதிகள் இடிக்கப்பட்டது அல்லது சேதப்படுத்தப்பட்டதுடன், நூறாயிரக்கணக்கான இசுலாமியர்களின் குழந்தைகளை தங்கள் பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு உறைவிடப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் மதிப்பிட்டுள்ளனர்.சீன அரசுக் கொள்கையின்படி, உய்குர் மக்களை சீன அரசின் தடுப்பு முகாம்களில் தன்னிச்சையாக தடுத்து வைத்தல், கட்டாய உழைப்பு, இசுலாமிய மத நம்பிக்கைகள் மற்றும் பண்பாடுகளை பின்பற்றுவதற்கு எதிராக உய்குர் இசுலாமிய மக்களை ஒடுக்குதல்கள் மேற்கொள்ளப்படுகிறது.இசுலாமிய நடைமுறைகளை ஒடுக்குதல், சீன அரசின் அரசியல் போதனை செய்தல், கடுமையான தவறான நடத்தைகளை மேற்கொள்தல் ஆகியவைகள் அடங்கும். மேலும் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்தல்கர்ப்பிணி பெண்களுக்கு கட்டாயக் கருக்கலைப்பு செய்தல் போன்ற மனித உரிமைகள் மீறப்படுகிறது. 2015 முதல் 2018 வரை, உரும்கி, கஷ்கர் மற்றும் கோத்தன் நகரங்களில் வாழும் பெரும்பாலான உய்குரி மக்களின் பிறப்பு விகிதம் 60%க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக சீன அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே காலகட்டத்தில், முழு சீனா நாட்டின் பிறப்பு விகிதம் 9.69% மட்டுமே குறைந்துள்ளது. 2018-ஆம் ஆண்டில் சிஞ்சியாங் மாகாணத்தின் பிறப்பு விகிதம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்பதை சீன அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் சீன அரசு உய்குர் மக்கள் மீதான கட்டாய கருத்தடை மற்றும் இனப்படுகொலை பற்றிய அறிக்கைகளை மறுத்தனர். 2019-ஆம் ஆண்டில் சிஞ்சியாங் மாகாணத்தில் பிறப்பு வீதம் மேலும் 24% குறைந்துள்ளது. அதே நேரத்தில் சீனாவின் நாடு தழுவிய அளவில் 4.2% மட்டுமே குறைந்துள்ளது.
சீனா அரசின் இந்த நடவடிக்கைகள் சிஞ்சியாங்கில் வாழும் உய்குர் மக்கள் மீதான பண்பாட்டுப் படுகொலை என விவரிக்கப்பட்டுள்ளது. அரசியல் அறிஞர்கள் சீனாவை இனப்படுகொலை செய்த நாடு என்று குற்றம் சாட்டுகிறார்கள். உய்குர் மக்கள் மீதான பண்பாட்டுப் படுகொலையை, இனப்படுகொலை மாநாட்டின் பிரிவு II-ஐ மீறுவதாக் சீனா மீது குற்றம் சாட்டுகிறது.இனப்படுகொலை மாநாட்டு தீர்மானங்கள் ஒரு நாடு ஒரு இனக்குழுவை "முழுமையாகவோ அல்லது அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் செயல்களை" தடை செய்கிறது.
ஆனால் சிஞ்சியாங்கில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக கூறுவதை சீன அரசாங்கம் மறுக்கிறது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் மதிப்பீட்டில், சிஞ்சியாங் மாகாணத்தில் சீனாவின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம். இருப்பினும் அது இனப்படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்று ஐக்கிய நாடுகள் அவை கூறியது.
இது தொடர்பாக சர்வதேச எதிர்வினைகள் வேறுபட்டு உள்ளது. சில ஐக்கிய நாடுகளின் அவையின் உறுப்பு நாடுகள் சீனாவின் கொள்கைகளை கண்டித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்திற்கு அறிக்கைகளை அனுப்பியது. சில நாடுகள் சீனாவின் கொள்கைகளை ஆதரித்தது. சீனாவின் மனித உரிமைகள் மீறும் செயல்கள் தொடர்பாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு டிசம்பர் 2020 இல் தள்ளுபடி செய்யப்பட்டது. ஏனெனில் குற்றங்கள் "சீனாவின் எல்லைக்குள், சீன நாட்டினரால் மட்டுமே செய்யப்பட்டதாகத் தெரிகிறது என்றும், இது சட்டப்படி உள்நாட்டு பிரச்சினை என்று தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட இன மக்களை விசாரிக்க முடியவில்லை என்றும் கூறியது.
19 சனவரி 2021 அன்று சீனாவில் மனித உரிமை மீறல்களை ஒரு பண்பாட்டுப் படுகொலை என்று அமெரிக்கா அறிவித்தது. கனடாவின் மக்களவை, டச்சு நாடாளுமன்றம், ஐக்கிய இராச்சியத்தின் கீழவை உள்ளிட்ட பல நாடுகளின் நாடாளுமன்றங்கள் சீனாவின் நடவடிக்கைகளை பண்பாட்டுப் படுகொலை என்று விவரிக்கும் பிணைப்பு இல்லாத தீர்மானங்களை நிறைவேற்றியது. லிதுவேனியா, பிரான்சு, நியூசிலாந்து, பெல்ஜியம் மற்றும் செக் குடியரசு போன்ற பிற பாராளுமன்றங்கள், சீன அரசாங்கம் உய்குர் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை "கடுமையான மனித உரிமை மீறல்கள்" அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று கண்டனம் செய்தது.
சீனாவின் சின்சியாங் மாகாணத்தில் உய்குர் மக்கள் மீதான மனித உரிமைகள் கவலைகள் குறித்த மதிப்பீட்டை சீனா வெளியிடக்கூடாது என மனித உரிமைகள் ஆணையத்திடம் வலியுறுத்திய போதும், 31 ஆகஸ்டு 2022 அன்று ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டது. சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா "கடுமையான மனித உரிமை மீறல்களை" செய்துள்ளது. இது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சமம் என மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று சீனா ஐ.நா.வை வலியுறுத்தியது. பெய்ஜிங் இந்த மதிப்பீடு அறிக்கையை மேற்கத்திய நாடுகளின் கேலிக்கூத்து எனக்கூறுகிது.
↑Turdush, Rukiye; Fiskesjö, Magnus (28 May 2021). "Dossier: Uyghur Women in China's Genocide". Genocide Studies and Prevention15 (1): 22–43. doi:10.5038/1911-9933.15.1.1834.