இயங்சி ஆற்றங்கரையில் படுகொலை செய்யப்பட்டவர்களும் அதன் அருகே சப்பானிய போர்வீரனும்
நாள்
திசம்பர் 13, 1937 – சனவரி 1938
இடம்
நாஞ்சிங், சீனக் குடியரசு
50,000–300,000 மரணம் (முதன்மை மூலங்கள்) 40,000–300,000 மரணம் (புலமையான கணக்கெடுப்பு) 300,000 மரணம் (சீன அரசு)
நாஞ்சிங் படுகொலைகள் (Nanjing Massacre) அல்லது நாங்கிங் படுகொலைகள் (Nanking Massacre) அல்லது நாஞ்சிங் வன் கலவி (Rape of Nanking) என அறியப்படுவது இரண்டாம் சீன-சப்பானியப் போரின் போது ஆறு வாரங்களாக இடம்பெற்ற நாஞ்சிங் போரில் கைப்பற்றப்பட்ட சீனக் குடியரசின் முன்னைய தலைநகர் நாஞ்சிங்கில் திசம்பர் 13, 1937 அன்று இடம்பெற்ற பெரும் படுகொலையும் மற்றும் போர் வன்புணர்வாகும். இக்காலப் பகுதியில் ஆயிரக்கணக்கான சீன பொதுமக்களும் ஆயுதமற்ற போர்வீரர்களும் சப்பானிய பேரரசின் படைகளினால் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வன்புணர்வும் கொள்ளையும் பரவலாக இடம்பெற்றது. வரலாற்றாளர்களும் சாட்சிகளும் 250,000 முதல் 300,000 வரையானோர் கொல்லப்பட்டனர் என கணிப்பிட்டுள்ளனர். இக்கொடூரத்தினைப் புரிந்த சில முக்கியமானவர்கள் போர் குற்றவாளிகள் என அடையாளமிடப்பட்டு, பின்னர் நாஞ்சிங் போர் குற்ற நீதிமன்றத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இச்சம்பவம் சச்சரவுள்ள அரசியல் விடயமாக நீடித்தது. ஏனென்றால், இப்படுகொலை கொள்கை நோக்கத்திற்காக மிகையான அல்லது முற்றிலும் புனையப்பட்டதென சில வரலாற்று மீள்நோக்கர் மற்றும் சப்பானிய தேசியவாதிகளால் வாதிடப்பட்டது. தேசியவாதிகளின் மறுத்தல் அல்லது போர்க் குற்ற நியாயப்படுத்தல் முயற்சியின் விளைவினால் நாங்கிங் படுகொலை எதிர்வாதம் சீன-சப்பானிய உறவில் தடையாக நீடித்தது. அத்துடன் சப்பானின் தென் கொரியா, பிலிப்பைன்சு உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
1945 இல் சப்பான் சரண் அடைந்ததும் பல இராணுவ குறிப்புக்கள் இரகசியமாக வைக்கப்பட்டதால் அல்லது அழிக்கப்பட்டதால் படுகொலை ஏற்படுத்திய மரணம் பற்றிய சரியான விபரத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை. தூர கிழக்குக்கான பன்னாட்டு இராணுவ நீதிமன்றம் இச்சம்பவத்தில் 200,000 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது. சீனாவின் உத்தியோக பூர்வ கணக்கெடுப்பு 300,000 என நாஞ்சிங் போர் குற்ற நீதிமன்ற ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்தது. சப்பானிய வரலாற்றாளர்கள் 40,000–200,000 வரை எனக் குறிப்பிட்டனர். சில வரலாற்று மீள்நோக்கர் மறுத்து, மரணங்களை இராணுவ அடிப்படையில் விபத்து அல்லது அதிகாரமளிக்காத கொடுமையின் தனிமைப்படுத்தப்பட்ட விபத்து என நியாயப்படுத்தினர்.
ஆயினும் சப்பானிய அரசாங்கம் நாங்கிங் வீழ்ச்சிக்குப் பின் சப்பானிய பேரரசின் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட நிராயுதபாணிகளின் கொலை, கொள்ளை மற்றும் ஏனைய வன்முறைகளின் நிமித்தம் செயற்பட ஒத்துக் கொண்டது. சப்பானிய அரசு மற்றும் சமுதாயத்திலிருந்த ஒரு குறிப்பிட்ட சிலர் மரணங்கள் இராணுவ ரீதியாக இயற்கையானவை என்றும் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒருபோதும் இடம்பெறவில்லையெனவும் வாதிட்டனர். படுகொலை மறுப்பு ஓர் முக்கிய சப்பானிய தேசியமாக இடம்பெற்றது. சப்பானில் மொதுமக்கள் கருத்துக்கள் மாறுபட்டுக் காணப்பட்டன. சிலர் படுகொலை இடம்பெற்றதை மறுத்தனர். இருப்பினும், இச்சம்பவ வரலாறு வாத எதிர்வாதத்தினை ஏற்படுத்தி குறிப்பிட்ட காலப்பகுதியில் பன்னாட்டு ஊடகங்களில் குறிப்பாக சீனா, தென் கொரியா மற்றும் ஏனைய கிழக்காசிய நாடுகளில் எதிரொலித்தது.
பிரதான ஊடகங்களில்
சினிமா
த பிளவர்ஸ் ஒப் வார் எனும் திரைப்படம் நாங்கிங்கின் 13 பெண்கள் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.